• Breaking News

    பூமியை விட ஐந்து மடங்கு பெரிய கறுப்புப் புள்ளிகள் சூரியனில் கண்டுபிடிப்பு

     சார்ஜாவில் உள்ள வானியல், விண்வெளி அறிவியல் மையத்தின் ஆராய்சியாளர்கள்பூமியைவிட ஐந்து மடங்கு பெரிதான கறுப்புப்புள்ளிகள் சூரையனில் உருவாகியுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர்.  வானியல் ஆராய்ச்சியில் இது ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.

    சார்ஜா விண்வெளி ஆராய்ச்சி கண்காணிப்பு மையத்தின் துணை பொது இயக்குனர் டாக்டர் இலியாஸ் பெரினினி  இது தொடர்பாகத் தெரிவிக்கையில்,


    சூரியனில் கறுப்பு புள்ளி என்றால் அது உண்மையில் கறுப்பான நிறத்தில் உள்ள புள்ளி அல்ல. சூரியனின் மேற்பரப்பில் மற்ற இடங்களை காட்டிலும் ஓரிடத்தில் வெப்பம் குறைவாக இருந்தால் அந்த இடம் நமக்கு கரும் புள்ளியாக தெரிகிறது.

    உதாரணமாக, கறுப்பு புள்ளியை சுற்றி உள்ள இடத்தில் 6 ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உள்ளது என்றால், புள்ளி உள்ள இடத்தில் வெப்பம் சுமார் 4 ஆயிரத்து 200 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருக்கலாம்.

    கடந்த 1989-ம் ஆண்டில் சூரியனில் ஏற்பட்ட புயல் காரணமாக கனடா நாட்டின் கியூபெக் மாகாணத்தில் கடும் மின்அதிர்வு ஏற்பட்டது. அதாவது சூரிய புயல் உருவானதால் அதில் இருந்து வெளிப்பட்ட சக்திவாய்ந்த காந்தபுலமானது பூமியை கடந்து சென்றபோது மத்திய மற்றும் வடக்கு கனடா பகுதிகளின் வானில் 2 நாட்களுக்கு பிரகாசமான வெளிச்சம் தோன்றியது.

    நிறைய தொழில்நுட்பங்கள் இதுகுறித்த ஆய்வுக்கு கைகொடுக்கிறது. பொதுவாக இதுபோன்ற சூரிய புள்ளிகள் 11 ஆண்டுகால இடைவெளியில் தோன்றுகிறது. இதுவரை கடந்த 2017-ம் ஆண்டில் நாஸா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்த சூரிய புள்ளிதான் பெரிதாக இருந்தது.

    தற்போது அதனை மிஞ்சும் வகையிலான சூரிய புள்ளிகள் தோன்றியுள்ளதை சார்ஜா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர். இந்த சூரிய புள்ளிகளை சிறப்பு தொலைநோக்கி கருவிகள் மூலம் ஆய்வு செய்ததில், அது பூமியை விட 5 மடங்கு பெரிதாக இருப்பது தெரியவந்துள்ளது.

    வரும் 2022-ம் ஆண்டில் இந்த சூரிய புள்ளிகள் பூமியில் சில விளைவுகளை ஏற்படுத்தலாம். அதாவது பூமியின் சுற்றுவட்டப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்கள் இந்த கறுப்பு புள்ளியால் ஏற்படும் சூரிய புயலால் சேதமடைய கூடும். இதுபோல தோன்றிய சூரிய புயலால் கடந்த 2003-ம் ஆண்டில் பூமியின் தாழ்வான வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டு இருந்த இரண்டு  செயற்கைக்கோள்கள் சேதமடைந்தன.

    இதுவரை இதுபோன்ற விளைவுகளால் 28 செயற்கைக்கோள்கள் சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சூரியனில் உள்ள கரும்புள்ளிகள் அதிகரித்து காணப்படும் கால கட்டத்தில் சூரியனில் ஏற்படும் அதிர்வலைகள் காரணமாக மனிதன் உருவாக்கிய செயற்கை அமைப்புகளில் பாதிப்பு ஏற்படும் என்பதால் விஞ்ஞானிகள் அதன் மீது ஒரு கண்ணை எப்போதும் வைத்துள்ளனர் என்றார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad