• Breaking News

    .முதலிடத்தில் மும்பை


     

     அபுதாபியில் நேற்றிரவு நடந்த 20-வது லீக் ஆட்டத்தில்   மும்பை இந்தியன்ஸ்  ,   ராஜஸ்தான் ராயல்ஸைஎதிர்த்து விளையாடியது.  

    பும்ராவின் மிரட்டல் பந்துவீச்சு,சூர்ய குமார் யாதவின் அதிரடி  ஆகியவற்றால் அபு தாபியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 20-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 57 ஓட்ட வித்தியாசத்தில் தோற்கடித்து மும்பை இந்தியன்ஸ் அணி.

    முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ஓட்டங்கள் சேர்த்தது. 194 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.1 ஓவர்களில் 136 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து 57 ஓட்டங்களில் தோல்வி அடைந்தது.


    கப்டன் ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் முதல் விக்கெட்டுக்கு 49 ஓட்டங்கள் (4.5 ஓவர்) சேர்த்து வலுவான தொடக்கம் அமைத்து தந்தனர். டி காக் 23 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் ரோகித் சர்மா (35ஓட்டங், 23 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ஸ்ரேயாஸ் கோபாலின் சுழலில் சிக்கினார். அதே ஓவரில் இஷான் கிஷனும் (0) ஆட்டம் இழந்தார்.

    இதைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவுடன், குருணல் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். நிலைத்து நின்று மட்டையை சுழட்டிய சூர்யகுமார் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு துரத்தினார். என்றாலும்  ஓட்டவேகம் சற்று மந்தமானது. தடுமாற்றத்துடன் ஆடிய குருணல் பாண்ட்யா 12 ஓட்டங்களில் (17 பந்து) வெளியேறினார். 10-ல் இருந்து 14-வது ஓவருக்குள் மும்பை அணி 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து வெறும் 29 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

    ஆனால் இறுதி கட்டத்தில் மும்பை வீரர்கள் அதிரடியில் வெளுத்து கட்டினர். சூர்யகுமாரும், ஹர்திக் பாண்ட்யாவும் தொடுத்த தாக்குதலில் மும்பை அணி 190 ஓட்டங்களை கடந்தது. 20 ஓவர் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 193 ஓட்டங்கள் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் 68 ஓட்டங்கள் எடுத்தனர்.


    ஐ.பி.எல்.-ல் தனது அதிகபட்ச ஓட்டங்களை பதிவு செய்த சூர்யகுமார் யாதவ் 79 ஓட்டங்களுடனும் (47 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 30 ஓட்டங்களுடனும் (19 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்..

     194 ஓட்டங்கள்  எனும் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி ஆடியது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (0) டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டி காக்கிடம் பிடிகொடுத்து செளியேறினார்.. அடுத்து இறங்கிய கப்டன் ஸ்டீவன் சுமித் (6) பும்ராவின் பந்து வீச்சை விளாச முயற்சித்த போது அது பேட்டில் உரசிக்கொண்டு விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச்சாக தஞ்சமடைந்தது. தொடர்ந்து சஞ்சு சாம்சன் (0), லோம்ரோர் (11 ஓட்டங்) ஆகியோரும் நடையை கட்டினர்.


    இதற்கு மத்தியில் மற்றொரு தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் போராடினார். ராகுல் சாஹர், குருணல் பாண்ட்யா ஆகியோரது சுழற்பந்து வீச்சில் 4 சிக்சர்களை பறக்க விட்டார். இதனால் ராஜஸ்தானுக்கு லேசான நம்பிக்கை பிறந்தது. 98 ஓட்டங்களை எட்டிய போது ஜோஸ் பட்லர் (70 ஓட்டங்கள், 44 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) பேட்டின்சனின் ஓவரில் பந்தை தூக்கியடித்தார். அதை எல்லைக்கோடு அருகே பொல்லார்ட் தட்டிவிட்டு சூப்பராக கேட்ச் செய்தார். அத்துடன் ராஜஸ்தானின் வெற்றி வாய்ப்பு சிதைந்தது.

    முடிவில் ராஜஸ்தான் அணி 18.1 ஓவர்களில் 136 ஓட்டங்கள் எடுத்தது.. இதனால் மும்பை அணி 57 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் பும்ரா 4 ஓவர்களில் 20 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐ.பி.எல்.-ல் அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். டிரென்ட் பவுல்ட், பேட்டின்சன் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


    மும்பை அணிக்கு இது 4-வது வெற்றியாகும். இதன் மூலம் மறுபடியும் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. ராஜஸ்தான் அணி தொடர்ச்சியாக சந்தித்த 3-வது தோல்வியாகும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad