• Breaking News

    எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற இந்தியா-சீனா ஒப்புதல்

     

    லடாக்கின் கிழக்கே உள்ள பங்கோங் சோ ஏரி, டெம்சோக், கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் சீன ராணுவம் ஊடுருவியது. இதனால் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடந்த மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மோதல் ஏற்பட்டது.

     இதைத்தொடர்ந்து எல்லையில் நிலவிய பதற்றத்தை தணிக்க இருதரப்பும் முதலில் கீழ்மட்ட ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தின. பின்னர் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கடந்த 6 ஆம் திகதி ஒருமித்த முடிவு எட்டப்பட்டது. 

    மோதல் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து படைகளை விலக்குவது என இருதரப்பும் ஒப்புக்கொண்டன. அதன்படி கல்வான் பள்ளத்தாக்கு, பங்கோங் சோ உள்ளிட்ட பகுதிகளில் பதற்ற தணிப்பு பணிகளில் இந்திய வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். 

    இந்த பணிகளின்போது கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15-ந் திகதி இரவில் இருநாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இருதரப்பு வீரர்களும் கற்கள், கம்பிகள் மூலம் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.

    பல மணி நேரம் நீடித்த இந்த பயங்கர மோதலில் இந்திய தரப்பில் ஒரு அதிகாரி உள்பட 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் பலி எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் அங்கும் 35 பேர் வரை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

    ஆசியாவின் இருபெரும் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த பயங்கர மோதல் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோதலை தொடர்ந்து எல்லையில் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா படைகளை குவித்துள்ளது. 

    மேலும் முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் சீனா மீண்டும் வாலாட்டினால் தகுந்த பதிலடி கொடுக்க படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து உள்ளது. 

    இது ஒருபுறம் இருக்க, எல்லையில் பதற்றத்தை தணித்து அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்த இருதரப்பும் ஆர்வம் காட்டின. அந்தவகையில் மோதல் நடந்த மறுநாளே இருதரப்பு ராணுவத்திலும் மேஜர் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடந்தது. 3 நாட்களுக்கும் மேலாக நீடித்த இந்த பேச்சுவார்த்தைகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

    இதைத்தொடர்ந்து லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் 2-வது கட்ட பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடந்தது. லடாக் எல்லையில் அமைந்துள்ள மோல்டோ எல்லைப்படை சந்திப்பு முனையின் சீன பகுதிக்குள் காலை 11.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை என 11 மணி நேரம் தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தைகள் நடந்தன. 

    இதில் இந்தியா தரப்பில் லடாக் எல்லையில் பாதுகாப்பு பணிகளை கவனித்து வரும் 14-வது படைப்பிரிவின் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர். சீனா தரப்பில் தெற்கு சின்ஜியாங் மிலிட்டரி மாவட்ட கமாண்டர் மேஜர் ஜெனரல் லின் லியு தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். 

    லடாக்கில் சீனா ஊடுருவலுக்குப்பின் லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் நடந்த 2-வது பேச்சுவார்தை இதுவாகும். மேலும் இருதரப்பிலும் உயிரிழப்பை ஏற்படுத்திய கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப்பின் நடைபெற்ற முதல் பேச்சுவார்த்தையும் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

    இரு நாடுகளுக்கு இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டு உள்ளது. குறிப்பாக எல்லையில் பதற்றத்தை தணித்து அமைதியை ஏற்படுத்த இருதரப்பும் ஒப்புக்கொண்டன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad