• Breaking News

    ஜார்ஜ் பிளாய்ட் கொலையில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் மீதும் வழக்கு


    அமெரிக்காவில் கறுப்பு இனத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கொலையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய  நான்கு பொலிஸ் அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் போராட்டங்கள் முடிவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அமெரிக்காவில் கறுப்பு இன மக்கள் வெள்ளை இன  பொலிஸ் அதிகாரிகளால் கொல்லப்படுவது வழக்கமாகி உள்ளது. இந்த நிலையில் அங்குள்ள மினியாபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்ற கருப்பு இனத்தவர், கடந்த 25 ஆம் திகதி பொலிஸார்  பிடியில் கொலை செய்யப்பட்டது, கறுப்பு இன மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த படுகொலை காட்சிகள் அடங்கிய வீடியோ அங்கு வைரலாகி அதிர வைத்தது.

    இந்த கொலையில் நேரடி தொடர்புடைய பொலிஸ் அதிகாரி மீது மட்டும் கொலை வழக்கு முதலில் பதிவானது.

    ஆனால் தொடர்புடைய  நான்கு பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து நீதி வழங்க வேண்டும் என் கருப்பு இன மக்கள் தொடர் போராட்டங்களில் குதித்தனர். சம்பவம் நடந்த மினியா பொலிஸ் நகரில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவியது. பெரும் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.

     ஜார்ஜ் பிளாய்ட் படுகொலையில் தொடர்புடைய  நான்கு  பொலிஸ் அதிகாரிகள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மின்னசோட்டா மாகாண அட்டார்னி ஜெனரல் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட முக்கிய தகவல்கள்:-

    * நேரடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள  பொலிஸ் அதிகாரி டெரக் சயூவின்மீது முதலில் சுமத்தப்பட்ட 3-ம் நிலை கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடரும். மேலும் அவர் மீது 2-ம் நிலை குற்றச்சாட்டும் சுமத்தப்படும்.

    * பணிநீக்கம் செய்யப்பட்ட எஞ்சிய 3  பொலிஸ் அதிகாரிகளான தாமஸ்லேன், அலெக்சாண்டர் குயெங், டூ தாவோ ஆகியோர் மீது கொலைக்கு உடந்தையாக இருந்ததாக (2-ம் நிலை குற்றத்துக்கு) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இதில் 2-ம் நிலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், 3-ம் நிலை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் விதிக்க முடியும்.

    இந்த திருப்பத்தை ஜார்ஜ் பிளாய்டு குடும்ப வக்கீல் பெஞ்சமின் கிரும்ப் வரவேற்றுள்ளார். இது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், “இது நீதிக்கான பாதையில் குறிப்பிடத்தகுந்த ஒரு நடவடிக்கை. ஜார்ஜ் பிளாய்ட் உடல் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்என கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad