• Breaking News

    கொரோனா வைரஸ் தோற்ற விசாரணைக்கு ஒத்துழைக்க சீனா தயார்


    கொரோனா வைரஸை உல்லகுக்குப் பரப்பியது சீனாதான் என்ற குற்றச்சாட்டு வலுவடைந்து வருகிறது. சீனா அதனை மறுத்துவந்தாலும் கொரோனா
     தோற்றம் பற்றிய சர்ச்சை நீடித்து வருகிறது. இது குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற குரலும் வலுத்து வருகிறது. இதுவரை விசாரணை குறித்த கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருந்து வந்த சீனா, இப்போது இறங்கி வந்துள்ளது.   சீன வெளியுறவு மந்திரி வாங் யி, பீஜிங்கில் நேற்று அளித்த வருடாந்திர பேட்டியின்போது இது வெளிப்பட்டது. அவர் நிருபர்களிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொரோனா வைரஸின் தோற்றம் பற்றி ஆய்வு செய்வதற்கு (விசாரணைக்கு) சர்வதேச அறிவியல் சமூகத்துடன் விஞ்ஞான ரீதியில் ஒத்துழைப்பு தர சீனத்தரப்பு ஒரு திறந்த நிலைப்பாட்டை கொண்டு இருக்கிறது. இந்த ஆய்வு செயல்முறையானது, தொழில்முறையில் அமைய வேண்டும். நியாயமானதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் இருக்கக்கூடாது. நியாயமாக நாம் ஆய்வில் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய விவகாரத்தில் அரசியலை தவிர்க்க வேண்டும். இந்த ஆய்வின்போது, அனைத்து நாடுகளின் இறையாண்மையையும் மதிக்க வேண்டும். ஆய்வுக்கு முன்பாகவே குற்றச்சாட்டு சுமத்துவதை சீனா எதிர்க்கிறது.

    கொரோனா வைரஸ் சீற்றத்துக்கு மேலாக அமெரிக்காவில் ஒரு அரசியல் வைரசும் பரவுகிறது. அது சீனாவை தாக்கி இழிவுபடுத்துவதாகும்.சில அமெரிக்க அரசியல்வாதிகள் அடிப்படை உண்மைகளை கவனிக்காமல், பல பொய்களை இட்டுக்கட்டி வருகிறார்கள். அத்துடன் பல சதித்திட்டங்களையும் தீட்டி உள்ளனர்.

    கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக ஆதாரம் இன்றி வழக்கு தொடுக்கிறார்கள். இது சர்வதேச சட்ட விதிகளை மிதித்து, மனசாட்சியை கைவிடுவதாக அமைந்துள்ளது. இது பொய்யானது. இதை நியாயப்படுத்த முடியாது. இது சட்டவிரோதமானது. இத்தகைய வழக்குகளை கொண்டு வருகிறவர்கள் பகல் கனவு காணுகிறார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக்கொள்வார்கள்.

    கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து கற்றுக்கொள்ளக்கூடிய மிக முக்கியமான விஷயம், பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் வாழ்க்கையும், ஆரோக்கியமும் இப்போது போல ஒருபோதும் நெருக்கமாக இணைக்கப்படவில்லை என்பதுதான்.

    அனைத்து நாடுகளும் ஒரே உலகளாவிய கிராமத்தில் வாழ்கின்றன என்பதையும், மனித நேயம் என்பது பகிரப்பட்ட எதிர்காலம் கொண்ட ஒரு சமூகம் என்பதையும், இதுவரை எதுவும் தெளிவுபடுத்தியது இல்லை.

    கொரோனா வைரசைப் பொறுத்தமட்டில் அதற்கு எல்லைகள் இல்லை. இனங்கள் கிடையாது. எந்த பாரபட்சமும் இன்றி ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் ஒரு சவாலாக அமைந்துள்ளது.

    அரசியல் ரீதியில் இதை கையாண்டால், அது வைரசுக்கு ஓட்டைகளை சுரண்டுவதற்கான வழியை கொடுக்கும். நாம் ஒவ்வொருவரும் பாதிக்கப்படக்கூடியவர்கள். அறிவியலை நிராகரித்தால், இந்த வைரஸ், பெரிய அழிவை ஏற்படுத்த அனுமதிப்பதாகும்.

    விலை மதிக்க முடியாத பல உயிர்களை கொரோனா வைரஸ் கொன்றுள்ளது. இதனால் நாடுகள் புவியியல், இனம், வரலாறு, கலாசாரம், சமூக அமைப்பு உள்ளிட்டவற்றை தாண்டி நாடுகள் எழுந்து நிற்க வேண்டும்.

    உலகெங்கும் உள்ள நாடுகள் பகிரப்பட்ட எதிர்காலத்துக்காக, ஒன்றிணைந்து செயல்பட்டு, இந்த பூமியை கூட்டாக பாதுகாக்க வேண்டும். பூமி மட்டும்தான் நம் அனைவருக்குமான வீடு ஆகும்.

    சீனாவும், அமெரிக்காவும் அமைதியான சக வாழ்வு வாழவும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புக்கான வழியைக் கண்டுபிடித்து வெவ்வேறு அமைப்புகள் மற்றும் கலாசாரங்களை கொண்ட நாடுகளுக்கு இது சாத்தியம் என்பதை நிரூபிக்க வேண்டும்.

    சீனா மிகப் பெரிய வளரும் நாடாக உள்ளது. அமெரிக்கா, வளர்ந்த நாடு என்ற வகையில் அது உலக அமைதிக்கும், வளர்ச்சிக்கும், சிறப்பான பொறுப்பை கொண்டுள்ளது.

    அமெரிக்காவை மாற்றவோ, அந்த இடத்துக்கு இன்னொரு நாட்டை கொண்டு வரவோ சீனா நினைக்கவில்லை. ஆனால் சீனாவை மாற்ற அமெரிக்கா முயற்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டியதற்கான நேரம் வந்து விட்டது என்று அவர் கூறினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad