• Breaking News

    கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியத் தருணத்தில் மத்தியக் கிழக்கு நாடுகள்: உலக சுகாதார அமைப்பு

    கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தருணத்தில் மத்தியக் கிழக்கு நாடுகள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து மத்தியக் கிழக்கு நாடுகளுக்கான உலக சுகாதார அமைப்பின் தலைவர் அகமத் அல் மந்த்ஹாரி கூறும்போது,

    ''மொராக்கோ முதல் பாகிஸ்தான் வரை மொத்தம் 22 நாடுகளில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 24 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். நாம் கொரோனாவுக்கு எதிராக முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். கடந்த நான்கு மாதங்களை விட இப்போதுதான் கொரோனா தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது.

    கொரோனாவால் அதிகமான இறப்புகள் எகிப்து, ஈரான்,  ஈராக்,  சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ளனஎன்று தெரிவித்துள்ளார்.

    சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய  கொரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கொரோனா வைரஸால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

    தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள்  கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    வீட்டை விட்டு வெளியே வரும்போது பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது.

     

     


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad