• Breaking News

    இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

     மான்செஸ்டரில் நடைபெற்ற மேற்கு இந்தியத்தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 113 ஓட்டங்களால் இங்கிலாந்து வெற்றிபெற்றது. 

     நாணயச்சுழற்சியில்  வெற்றி பெற்ற மேற்கு இந்தியத்தீவு அணித் தலைவர்  பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அண்மைக்காலமாக மான் செஸ்டரில் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்யும் அணி வெற்றி பெற்றதில்லை  என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.

    முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 469 ஓட்டங்கள் குவித்து  ஆட்டத்தை நிறுத்தியது. முதல் இன்னிங்சில் அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 176 ஓட்டங்கள் அடித்தார்.  மேற்கு இந்தியத் தரப்பில் ரோஸ்டன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

     மேற்கு இந்தியா முதல் இன்னிங்சை ஆரம்பித்தபோது 3-வது நாள் போட்டி முழுவதும் மழையால் இரத்து செய்யப்பட்டது. 4-வது நாள் ஆட்டத்தில் மேற்கு இந்தியா நிதானமாக விளையாடியது. 

    பிராத்வைட் (75), ப்ரூக்ஸ் (68), ராஸ்டன் சேஸ் (51) ஆகியோரின் அரைசதங்களால் மேற்கு இந்தியா  முதல் இன்னிங்சில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 287 ஓட்டங்கள் எடுத்தது.

     

    முதல் இன்னிங்சில் இங்கிலாந்து தரப்பில் பிராட் , கிரிஷ் ஒக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

    இதையடுத்து, 182 ஓட்ட முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரும்களம் இறங்கினர். 3 பந்துகளை மட்டுமே சந்தித்த பட்லர் ஓட்டம் எடுக்காமல்  ரோச் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த சக் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரூட் உடன் ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

    இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 37 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் 4 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது

     

    219 ஓட்டங்கள் முன்னிலையுடன் டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. போட்டி தொடங்கியது முதலே இங்கிலாந்து வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ஸ்டோக்ஸ் மேற்கு இந்திய வீரர்களின் பந்து வீச்சை விளாசி எடுத்தார். 

    3 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ஓட்டங்கள் என்ற நிலையில் இருந்த போது இங்கிலாந்து ஆட்டத்தை நிறுத்தியது.  ஸ்டோக்ஸ் 57 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் உள்பட 78 ஓட்டங்கள் குவித்து களத்தில் இருந்தார். 

    இதையடுத்து 312 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கு இந்திய அணி களமிறங்கியது. டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் என்பதால் வெற்றி தோல்வியின்றி முடியும் என அனைவரும் கருதினர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக வெற்றி, தோல்வி என முடிவு தெரியும் போட்டியாக அது மாறியது. 

    2-வது இன்னிங்சில் பிராத்வேட்டும், ஜான் கேம்பாலும் மேற்கு இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஜான் 4 ஓட்டங்களிலும், பிராத்வேட் 12 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். 

    பின்னர் வந்த வீரர்களும் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சால்அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்து திரும்பினர். தோல்வியை தவிர்க்க போராடிய மேற்கு இந்திய அணியின் புரோக்ஸ் 62 ஓட்டங்களுடனும்,பிளாக்வுட் 55 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து வெளியேறினர். 

    இறுதியில் சற்று தாக்கு பிடித்த ஹோல்டர் 35 ஓட்டங்கள் எடுத்தார். எஞ்சிய வீரர்கள் அனைவரும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் மேற்கு இந்தியா  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. 

    இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பிராட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில்  இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. 

    துடுப்பாட்டம், பந்து வீச்சு இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். 

    இந்த வெற்றியின் மூலம் 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் தொடரை இங்கிலாந்து சமன் செய்துள்ளது. 

    இரு அணிகளும் சமமாக உள்ள நிலையில் டெஸ்ட் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது டெஸ்ட் போட்டி இதே மான்செஸ்ட்ர் மைதானத்தில் வரும் 24-ம் திகதி நடைபெற உள்ளது.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad