• Breaking News

    மேற்கு இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்றது இங்கிலாந்து

    மான்செஸ்டரில் நடைபெற்ற மேற்கு இந்தியத்தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் 269 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இங்கிலாந்து  2-1  என்ற கனக்கில் தொடரைக் கைப்பற்றியது.

    இங்கிலாந்து ‍ மேற்கு இந்தியா ஆகியவற்றுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 24‍ந்திக‌தி மான்செஸ்டரில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 369 ஓட்டங்களும், மேற்கு இந்தியா 197 ஓட்டங்களும் எடுத்தன. அடுத்து 172 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 2 விக்கெட்டுக்கு 226 ஓட்டங்களுடன் ஆட்டத்தை நிறுத்தி 399 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

    பின்னர் இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய மேற்கு இந்திய‌ அணி 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 10 ஓட்டங்கள் எடுத்தது. 4-வது நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து விளையாடிய மேற்கு இந்திய‌ அணி, இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் 37.1 ஓவர்களில் 129 ஓட்டங்கலில் வீழ்ந்தது. மூன்று முறை மழை குறுக்கிட்டும் சிறிது நேரத்தில் நின்று போனதால் மேற்கு இந்திய வீரர்கள் ஏமாந்து போனார்கள். அந்த அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 31 ஓட்டங்களும், ஜெர்மைன் பிளாக்வுட் 23 ஓட்டங்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டுகளும் எடுத்தனர். பிராட் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

     

    இதன் மூலம் 269 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற‌ இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முன்னதாக முதலாவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீசும், 2-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றிருந்தது. அரைசதத்துடன் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 10 விக்கெட்டுகளை அள்ளிய ஸ்டூவர்ட் பிராட் ஆட்டநாயகன் விருதை பெற்றார். தொடர் நாயகனாக ஸ்டூவர்ட் பிராட்டும், மேற்கு இந்திய சகலதுறை வீரர் ரோஸ்டன் சேசும் தேர்வு செய்யப்பட்டனர்.

    இந்த தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மொத்தம் 50 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.3 போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் 50 விக்கெட்டுகள் வீழ்த்துவது 1912-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் நிகழ்வாகும்.

    இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் வெற்றிக்கு இங்கிலாந்து அணி 40 புள்ளிகளை வசப்படுத்தியது. கொரோனாவின் கோர தாண்டவத்துக்கு மத்தியில் துணிச்சலுடன் உயிர்பாதுகாப்பு மருத்துவ சோதனைகளுடன், ரசிகர்கள் இன்றி இந்த தொடரை இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பது மற்ற நாட்டு கிரிக்கெட் சபைகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad