• Breaking News

    தீவு பகுதிக்கான பொது போக்குவரத்து தொடர்பில் மாவட்ட மட்டத்தில் பல கூட்டங்களை நடாத்தியும் தீர்வு கிடைக்கவில்லை - கை விரித்தார் யாழ். அரச அதிபர்

     


    தீவு பகுதிக்கான பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் தடைகள் தொடர்பில் மாவட்ட மட்டத்தில் பல தரப்பட்ட கூட்டங்களை நடத்தியும் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்  தெரிவித்துள்ளார்.

    யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

    தீவக பொது போக்குவரத்தில்  அடிக்கடி படகுகள்  பழுதடைவதன்  காரணத்தினால் போக்குவரத்து தடைப்படுகின்றது. அதேநேரம் பொதுமக்கள் மிகவும் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொள்ளும் போது பயண  நிலையானது மிகவும் அபாயமாக காணப்படுகிறது.

    தீவகதற்கான பொதுப் போக்குவரத்து தொடர்பில்  பல தடவைகள் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளோம். இந்த தீவக போக்குவரத்திற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறுப்பாக இருந்து அவர்கள் படகுகள், பாதை மற்றும் குமுதினி படகு போன்றவற்றை இயக்கி வருகிறார்கள்.


    குமுதினி படகு பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. அதேபோல நெடுந்தாரகை, வடதாரகை, சமுத்திரா  போன்ற படகுகள் பிரதேச சபையினரால் கூட்டுறவு அமைப்பினரால் இயக்கப்படுகிறது.


    இந்த படகுகள் அடிக்கடி பழுதடைவதன் காரணமாக நெடுந்தீவுக்கான  போக்குவரத்து அடிக்கடி தடைப்படுகிறது.

    ஏனைய தீவுகளில்  படகு பாதை தற்பொழுது சீரமைக்கப்பட்டு பயணம் தொடர்ந்தாலும் இயந்திரம் பழுதடைந்து நிலைமையில் பாதை இயக்க முடியாது இருப்பதாக சுட்டிக் காட்டப்படுகின்றது.


    இன்றும் கூட பொது மக்கள் பிரதிநிதிகள்  மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர். அதாவது இந்த படகு, பாதையை சீரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

     அண்மைக்காலங்களில் ஊடகங்கள் மூலமும் இந்த பிரச்சினைகள் வலுப்பெற்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


    நாங்களும் வீதி அபிவிருத்தி அதிகார சபை, மற்றும் ஏனைய திணைக்களங்களுடனும் வடமாகாண ஆளுநருடன் இணைந்து சகல  தரப்பினரிருடன்  கலந்துரையாடல்களை நடாத்தி இது பற்றி ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்து இருக்கின்றோம்.

    இருந்த போதிலும் சில நடைமுறை சிக்கல்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் காரணமாக அவற்றை முழுமையாக அமுல்படுத்துவதில் சற்று சிரமம் காணப்படுகின்றது.


    இருந்தபோதிலும் வீதி அபிவிருத்தி அதிகார சபை இந்த படகு போக்குவரத்து சேவை முழுவதையும் பொறுப்பெடுத்து தீவகம் உள்ளடங்கலாக ஒரு மத்திய நிலையத்தினை  அமைத்து, அங்கு ஒரு தகுதிவாய்ந்த பொறியியலாளரின்  கீழே அந்த படகு பாதை சேவைகளை ஒருங்கிணைத்து மேற்கொள்வதற்கு உரிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


    அதற்குரிய முன்மொழிவுகள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளரிடம் விடுத்துள்ளோம். அது தொடர்பில் உரிய அமைச்சுக்கு அனுப்பியுள்ளோம். எனவே வீதி அபிவிருத்தி அதிகார சபை  அமைச்சே இதற்கு முடிவெடுக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.


    இருந்தபோதிலும் சில நடைமுறை சிக்கல்கள் சட்ட ஏற்பாடுகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில்  முடிவெடுத்து ஒரு தீர்மானம் எடுக்க வேண்டிய கடப்பாடு நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சுக்கு காணப்படுகின்றது .


    இதனை துரிதப்படுத்தி பொதுமக்களுக்குரிய சேவையினை சீராக்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இருந்தபோதிலும் தாமதம் அடைவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். பொதுமக்கள் இதனால் மிகவும் அவதியுறும் நிலையில் காணப்படுகின்றது.

    இதனை செயற்படுத்த ஒரு விசேட கலந்துரையாடல் மூலம் இதனை மேல்மட்டத்தினருடன் கலந்துரையாடி ஒரு தீர்மானம் எடுப்பதற்குரிய நடவடிக்கை எடுத்து வருகின்றோம். எனினும் மாவட்ட மட்டத்தில் பல தடவைகள் கூட்டங்களை நடத்தியும் அதற்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை.

    படகுகள்  திருத்தப்படாமைக்கு  படகின் தன்மை காரணம். அதாவது திருத்தக் கூடிய இடம் வடக்கில் இல்லை அது பிறிதொரு  இடத்திற்கு கொண்டு சென்று அதனைத் திருத்தி அமைக்க வேண்டும் 

    இந்த இரண்டும்  பிரதானமாக பிரச்சனையாக காணப்படுகின்றது. அதற்கு நாங்கள் மாற்று ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டிய தேவைப்பாடு காணப்படுகின்றது .

    எனவே மாற்றீடாக பயன்படுத்த  நமக்கு போதியளவு படகு  இல்லை என்பதும் ஒரு காரணமாக காணப்படுகின்றது.

    மாற்றீடான படகுகள்  வழங்கும் பட்சத்தில் அதற்குரிய எரிபொருள் வழங்குவதிலும் ஒரு இடர்பாடு காணப்படுகின்றது - என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad